November 9, 2009

செத்துப்போ என்கிறாய்!

 

உன் விழியம்புகள்
என்னிதயத்தில்
ஏற்படுத்திய காயங்களுக்கு
பேரன்பால் மருந்திட்டு
மேகப்பஞ்சு வைத்து
மின்னல் கட்டு செய்வாயென
வானவில் கனவு  கண்டேன்!

சொல்லம்புகளாலும்
சிதைத்துவிட்டு
செத்துப்போ என்கிறாய்!

பாவம் தேங்கிய நீரும்!



மழை தன் சிறகுகளை
சுருக்கிக்கொண்ட
முன்மாலைப்பொழுது!

சிவப்பேறிய செம்மண்
சாலையில் திட்டுத்திட்டாக
மழைநீர் தேங்கல்கள்!

அவள்
பஞ்சுப்பாதங்களும்
பட்டுப்பாவாடையும்
நனையாதவாறு
தாண்டித் தாண்டி
நடந்து போனாள்!

எனக்குத்தான்
பாவமாக இருந்தது
தேங்கிய நீரை பார்க்க..!